Saturday, August 19, 2023

தியாகத் திருநாளை முன்னிட்டுசமுதாயச் சொந்தங்களுக்குஅன்பு வேண்டுகோள்..!

தியாகத் திருநாளை முன்னிட்டு
சமுதாயச் சொந்தங்களுக்கு
அன்பு வேண்டுகோள்..!

சமுதாயத் தலைவர்களின் கூட்டறிக்கை

இதோ, இன்னும் சில நாள்களில் ஈதுல் அத்ஹா எனும் தியாகத் திருநாள் நம்மை வந்தடையவிருக்கின்றது.இத்தருணத்தில் உங்களனைவருக்கும் இதயங் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதே சமயம், இந்தச் சந்தர்ப்பத்தில் சில முக்கியமான வழிகாட்டுதல்களை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். 

1. சில அசாதாரணமான சூழல்களின் காரணமாக இந்தத் தடவை குர்பானிக்காகப் பிராணிகளை வாங்குவதிலும் அவற்றைக் குர்பானி செய்வதிலும் சிரமங்களைச் சந்திக்க நேரலாம். என்றாலும் எவர்கள் மீதெல்லாம் குர்பானி கடமையாக இருக்கின்றதோ அவர்கள் அனைவரும் இந்தச் சிரமங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் தவறாமல் குர்பானி கொடுத்தாக வேண்டும். நிலைமைகள் சரியில்லை என்கிற ஒரே காரணத்திற்காக மனம் சலனப்பட்டு, இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்து விடலாகாது. அதற்கு மாறாக, முந்தைய நாள்களில் எந்த அளவுக்கு ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் குர்பானி கொடுத்து வந்தீர்களோ அதே அளவுக்கு ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்தவாறு குர்பானி கொடுக்க வேண்டும். எவர் குர்பானி கொடுக்கின்ற தகுதி பெற்றிருந்தும் ஈதுல் அத்ஹாவின்போது குர்பானி கொடுக்கத் தவறுகின்றாரோ அவர் நம்முடைய பெருநாள் திடல்களுக்கு வரவே வேண்டாம் என்கிற நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் வைத்திருங்கள். 

2. வெறுமனே சடங்காக குர்பானியை நினைத்துவிடாதீர்கள். அது சடங்கு அல்ல. அதற்கு மாறாக, அல்லாஹ்வின் தூதரான இப்ராஹீம் நபியின் அழகிய வழிமுறைதான் அது. அந்த அழகிய வழிமுறையை நபிகளார்(ஸல்) தம் வாழ்நாளில் கடைப்பிடித்திருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் இறைவழிபாட்டின் மிக உன்னதமான, முக்கியமான வடிவம்தான் குர்பானி. எந்தவொரு நல்லறமும் குர்பானிக்கு மாற்றாக ஆகவே முடியாது. எனவே மார்க்கமும் ஷரீஅத்தும் நம் மீது சுமத்தியுள்ள கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பெருநாளுக்குரிய நாள்களில் அதிகமதிகமாக இறைவனின் மகத்துவத்தையும் மாண்பையும் அறிவிக்கின்ற விதத்தில் தக்பீர் சொல்லியவாறு இருங்கள். 

3.  சாலைகளிலும் மக்கள் நடமாடுகின்ற இடங்களிலும் பிராணிகளைப் பலியிடாதீர்கள். அதற்கு மாறாக நல்ல பரந்து விரிந்த மைதானங்களில் இந்தக் கடமையை நிறைவேற்றுங்கள். இரத்தத்தையும் உபரி உறுப்புகளையும் சிதிலங்களையும் அவசியம் மண்ணில் புதைத்து விடுங்கள். தூய்மையைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருங்கள். 

4. கிராமங்களிலும், சிற்றூர்களிலும், ஊர்களிலும், நகரங்களிலும் பிராணிகளைப் பலியிடுவதற்கான வசதிகளையும் வழிவகைகளையும் கூட்டு முறையில் ஏற்பாடு செய்துகொள்ள முயலுங்கள். அதாவது மக்கள் வந்து எளிதாக குர்பானி தரத்தக்க வகையில் இடவசதிகளை கூட்டு முறையில் ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள். 

5. நீங்கள் செய்கின்ற எந்தவொரு செயலும் பொதுவாக நாட்டு மக்களும் குறிப்பாக சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளும் உங்களுக்கு எதிராக புகார் சொல்வதற்கும், முறையிடுவதற்கும் இடம் தருவதாக அமைந்து விடக் கூடாது. உங்களுடைய எந்தவொரு செயலும் பதற்றத்துக்கு வித்திடக் கூடாது. ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பேணி நடந்துகொள்ளுங்கள். எந்த நிலையிலும் சட்டத்துக்கு எதிராகவோ, விதிகளை மீறியோ நடந்துகொள்ளாதீர். 

6. பெருநாளுக்குச் சில நாள்கள் முன்னதாக நகரத்திலும் ஊரிலும் இருக்கின்ற பொறுப்பான மனிதர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்துக் கொள்ளுங்கள். நிலைமைகளைக் கண்காணிப்பதிலும், சிரமங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவதிலும் இந்தக் கமிட்டி துணை நிற்கட்டும். குர்பானிகள் சிறப்பாக நடந்தேறுவதை மேற்படி கமிட்டி கண்காணித்து தக்க வழிவகைகளைச் செய்யட்டும். உள்ளுர் அரசு அதிகாரிகளுடனும் காவல் அலுவலர்களுடனும் மேற்படி கமிட்டி தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மேலும் அமைதியையும் இணக்கத்தையும் நிலைநிறுத்துவது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதிலும் மேற்படி கமிட்டியினர் பெரும் பங்காற்ற வேண்டும். 

7. எந்த நிலையிலும் வதந்திகள் பரவுவதற்கு இடம் தந்துவிடாதீர்கள். கவலைக்குரிய செய்தி ஏதேனும் வெளியானால் உடனே மேற்படி கமிட்டியின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்பட வேண்டும். கமிட்டியினரும் செய்தியின் உண்மைநிலையை ஆராய்ந்தறிந்து தக்க நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும். குர்பானி செய்வதற்கான வழிமுறைகளை பள்ளிவாசல் இமாம்கள் விளக்கிச் சொல்லி, குர்பானி கொடுக்குமாறு மக்களை ஊக்குவிக்க வேண்டும். 

8. இந்தப் பெருநாள் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் உலகத்துக்கும் நற்பேறுகளையும் வளங்களையும் அளிப்பதாக அமையட்டுமாக என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். 

ஜனாப் மௌலானா சையத் முஹம்மத் ராபே ஹஸனி நத்வி சாஹிப்
(தலைவர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(நாஜிம், நத்வத்துல் உலமா, லக்னௌ)

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி
(துணைத் தலைவர் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்) 
(அமீர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்)

ஜனாப் மௌலானா சையத் மஹ்மூத் அஸத் மதனி சாஹிப்
(பொதுச் செயலாளர், ஜமிய்யத்துல் உலமா ஹிந்த்)
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)

ஜனாப் மௌலானா காலித் சைஃபுல்லாஹ் ரஹ்மானி சாஹிப்
(செயலாளர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(தலைவர், ஃபிக்ஹு அகாடமி)

ஜனாப் நவீத் ஹாமித் சாஹிப்
(தலைவர், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத்)

ஜனாப் மௌலானா அலீ அஸ்கர் இமாம் மஹ்தி சாஹிப்
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(பொது நிர்வாகி, மர்கஸி ஜமிய்யத் அஹ்லே ஹதீஸ் ஹிந்த்)

ஜனாப் மௌலானா காலித் ரஷீத் ஃபரங்கி மஹல் சாஹிப்
(செயற்குழு உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)
(துணை இமாம், ஈத்காஹ், லக்னௌ)

 ஜனாப் மௌலானா யாசின் அக்தர் மிஸ்பாஹி சாஹிப்
(நிறுவனத் தலைவர் தாருல் கலம், காதிரி மஸ்ஜித், ஜாகிர் நகர், தில்லி)

ஜனாப் மௌலானா கல்பே ஜவ்வாத் நக்வி சாஹிப்
(மூத்த உறுப்பினர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்)

-Azeez Luthfullah

No comments:

Post a Comment